என் கன்னத்தை, உன் பிஞ்சுக் கை ஏந்தி−நீ,
எனக்கொரு முத்தம் தருவாயா?
என் வயிற்றில், உன் சிறு கால் பதித்து−நீ,
எம்பி, என் தோள் சாய்வாயா?
என் மார்பில், அழகிய முகம் பதித்து−நீ
உன் விசும்பலில், என் மனம் கரைப்பாயா?
என் கரத்தால், உந்தன் தலை கோத−நீ,
எனக்கே வாய்ப்பும் கொடுப்பாயா?
என் செவியின் அணியை, நீ திருக−
நான் செல்லமாய், கோபிக்க விடுவாயா?
என் அழகிய கேசம் நீ கலைத்து,
உன் கோபமும் தீர்த்துக் கொள்வாயா?
எந்தன் விழியை நீ மறைத்து−
உன்னை, யாரெனக் கேட்பாயா?
எந்தன் பின்னே நீ நின்று−
உன் இரு கரத்தால் எனை அணைப்பாயா?
என் முகம் ஒளிர்ந்து மலர்ந்திடவே−
உன் மழலை மொழியால், மயக்குவையா?
என் அகம் குழைந்து, குளிர்ந்திடவே−
உன்னை இந்த, அன்னையின் செல்லம் என்பாயா?
என் அதரம் விரும்பிச் சுவைத்திடவே−
உன் வாயின் அமுதம் அளிப்பாயா?
என் உதரம் பாக்கியம் செய்திடவே−நீ
என்னில் ஒரு முறை ஜனிப்பாயா?