(பார்த்தனாய் ஆவேனா?….)
ஐவர்க்கு நடுவே அர்ச்சுணனாகி, என்−
ஐயங்கள் உன்னிடம் கேட்கட்டுமா?
ஐயன் உந்தன் உபதேசத்தால்−
மெய்யாம் ஞானமும் காணட்டுமா?
பொய்யாய் உன் மேல் கோபம் கொண்டு−
பரமன் சிரிப்பதை பார்க்கட்டுமா?
போர்க்களம் போன்ற வாழ்வாம் இதனில்−
போகும் வழி, உன்னால் உணரட்டுமா?
என் பலத்தாலே, எல்லாம் முடியும்−
என்றே சொல்லி, சினம் மூட்டட்டுமா?
உன் பலத்தால் தான் எதுவும் நடக்கும்−
என்றே உணர்ந்து, உனைச் சேரட்டுமா?
சாரதியாக உன்னை ஏற்று−
சகஜமாய், வாழ்வை ஓட்டட்டுமா?
சஞ்சலத்தாலே, என்னை மறந்து,
“சங்கடம் உன்னால்” என ஏசட்டுமா?
எய்தும் வெற்றியின் காரணம் நானென−
என்னை, உலகிற்கு காட்டட்டுமா?
எய்பவன் நீ என்று புரிந்த பின்னாலே−
என் நிலை அறிந்து, உனை பணியட்டுமா?
தோழனாய் நினைத்து, உன்னிடம் நானும்−
தவறுகள் செய்யவே துணியட்டுமா?
தரணியை ஆள்பவன் நீ என தெளிந்து−பின்
தாளிணையில், சரண் அடையட்டுமா?
திவ்யமான நேத்திரம் பெற்று−
நெடியோன், உன் உரு நோக்கட்டுமா?
பவ்யமும், பயமும், நெஞ்சினில் வழிய−
பழகிய வடிவமும் வேண்டட்டுமா?
என்னை உனக்கு, தாரை வார்த்து−
“என் பிரான்” நீயென சொல்லட்டுமா?
உன்னை உறவாய், உவந்து ஏற்று−
உலகில் வாகையும் சூடட்டுமா?
உன்னை எனக்கென்றும் தருவாயென்றால்−
ஒரு விசாரம் இன்றியே, இருக்கட்டுமா?
என் துணையாய் என்றும், நீ வருவாயென்றால்−
இசைந்து, பிறவிகள் எடுக்கட்டுமா?
ஏதென்றாலும், உன் மனம் கோணாது−
ஏதங்கள் புரியாது, வாழட்டுமா?
தீதோ, நன்றோ, நீயும் தந்திட−
தமியேன் வரமாய், அதை ஏற்கட்டுமா?