கண்ணன் எங்கே, காணேனே நான்−
கண்டால் உடன், வரச் சொல்வாயோ?
பெண் நான், அவன் சொத்தாவேனே−
பிரிந்தேகினால், பித்தாவேனே!
அவன் கைகளும், எனைத் தீண்டுமோ?
அன்பை அவன், விழி பேசுமோ?
அவன் தோளிலே, நான் சேரவே−
அவனாகவே, வகை செய்வனோ?
அணையாத தாபத்தை, அவன் அறிவானோ?
அதரத்தின் நிறம் பார்த்து, நிலை உணர்வானோ?
துணையாக வர வேண்டி, துடிக்கின்ற என்−
தணலாகும் பெண்மையிலே, மெழுகாவானோ?
எதிராக நின்றாலே, அது போதுமே;
சதிராடும் என் நெஞ்சம், சிறிதோயுமே;
விதி உண்டு, அவன் இங்கு எனைச் சேரவே−
கதி ஒன்று, அவனுக்கினி என் மடியாகுமே!
விண் மீது வெண்ணிலவு, வரும் முன்னமே,
என் முன்னே, அவன் வந்தால், நலமாகுமே!
பொன்னான காலங்கள் கழிந்தோடினால்−
பெண் பாவம், அவனுக்கொரு பழியாகுமே!
கண்ணாரக் காண, அவன் வர வேண்டுமே;
வாயாரப் பேச, அவன் துணை வேண்டுமே;
நெஞ்சார சுகம் காண, அவன் தோள் வேண்டுமே;
நான் ஆற, எனக்கென்றும், அவன் வேண்டுமே!
தணியாத பெண்மை, இங்கு தவித்தேங்குதே;
கனியாத காதலினால், அது தடுமாறுதே;
இனியேனும், அவன் வந்தால், நிலை மாறுமே!
இனிதாக, என் காதல் அரங்கேறுமே!
தூதாக நீ சென்று, அழைத்தோடி வா; அது−
மாதெந்தன் மன நோய்க்கு, மருந்தாகுமே;
காதங்கள் கடந்திங்கு, அவன் வந்தாலே−
காத்திருக்கும் என் காதல், அவன் விருந்தாகுமே!!