அலுத்து விட்டதா,
அவனியில் வாழ்க்கை?
அங்கலாய்க்காதே−
அடியிணை தந்தேன்!
அடைக்கலம் இங்கே;
அன்புள்ளம் இங்கே;
ஆறுதல் தேடி, நீ
அலைவதும் எங்கே?
மறவாது இந்த
மலரடி வீழ்ந்தால்−
உறவாய் நானும்,
உனக்காய் இருப்பேன்!
சதமென எதுவும்
சகத்தினில் இல்லை;
பதமலர் இதை விட
பெருந்துணை இல்லை!
கனவாம் வாழ்வில்,
கழியும் பொழுதில்−
நினைவாய் நீளடி,
நெஞ்சினில் உழுவாய்!
காட்டிக் கொடுத்தே,
காத்திட வந்தேன்;
பூட்டியே வைப்பாய், என்−
பொன்னடி உள்ளில்!
பிறவிப் பிணியின்
பிடியில், நீ ஏனோ?
இறவா வரம் தரும்
இணையடி வீணோ?
வருவாய், பெறுவாய்,
வரம் இது, தெளிவாய்!
கருணையின் உரு−இக்
கழலடி வீழ்வாய்!