அன்றளந்தடைத்து, கடந்திடந்த காலை,
அடியேன் காணப் பற்றில்லை;
பின்னும், மச்ச கூர்மமாய்,
அச்சமிலா வராகமாய்,
மண்ணளந்த வாமனனுமாய், நீ−
இங்கேகின காலை,
ஏழை எனக்கொரு பாக்கியமில்லை;
அரிவுருக்கொண்டு
அரியை அழித்த போதும்,
அரசர் குலமுணர பாடம் புகட்டிய போதும்,
அபலை உனை காண வாய்க்கவில்லை;
அண்ணல் வனமேகிய போது,
அடி தொடர்ந்தொரு சேவை
செய்யுமொரு பேறும்,
பெற்றிலேனில்லை;
ஆயனுக்கு முன் தோன்றலும், நாயேன் கண்டிலேனில்லை;
மண்ணும் வெண்ணையுமுண்டு,
மதங்கொண்ட அசுரரை நீ மாய்த்த போதும்,
மாயன் உனை, இனங்காணவுமில்லை;
நூலும், நாலும் அறிந்தேனில்லை;
மாலோன் உனை மனத்திருத்தியதில்லை;
காளிய நெஞ்சம் கொண்டதனாலே,
தாளிணை பணிய அறியவுமில்லை;
காலன் கயிற்றுக்கு வீழும் முன்னே,
கரியவா, என் மேல் கனிந்திடுவாயோ?
கலியினை தீர்க்கும் கழலிணை பதித்து,
கடையேன் எனது ஊன் உடலொழித்து,
பாலினில் திரளும் வெண்ணையாமென் ஆன்மா,
பாணியாலெடுத்து, பரிந்தேற்பாயோ?…